கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வாராந்திர ஆய்வுக்கூட்டம் - தமிழக குரல் - சேலம்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 13 May 2024

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வாராந்திர ஆய்வுக்கூட்டம்


 பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பின் மூலம் உறுதி செய்திட வேண்டும்.குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்ற அறிக்கையினை வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.குடிநீர் தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


சேலம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுடனான வாராந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.05.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:


கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சேலம் மாநகராட்சி, நகராட்சிகள்,பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படுகிறது.குறிப்பாக, கடந்த வாரம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து அடுத்து நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீர்விநியோகம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அந்தவகையில், இன்றைய தினம் நடைபெற்ற குடிநீர் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் என அனைத்துப் பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவரும் குடிநீரின் அளவு மற்றும் எந்தெந்த பகுதிகளில் வரவுள்ள நாட்களில் குடிநீர் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோடை காலத்தில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அலுவலர்கள் தொடர் கண்காணிப்பினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோடை காலத்தைக் கருத்தில் கொண்டு குடிநீரை தேவைக்கேற்ப சிக்கனமாகப் பயன்படுத்திடத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.தற்பொழுது, சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்  மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 192.591 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீர், 33.94 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களின் 60 வார்டுகளில் உள்ள 9.66 இலட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனி குடிநீர் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீர் திட்டம் ஆகிய காவிரி குடிநீர் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் 130 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.


மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்றுவரும் குடிநீர் திட்டப் பணிகளின் முன்னேற்ற அறிக்கையினை வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும்,குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் ஏதேனும் இருப்பின் அவற்றை விரைந்து முடித்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) மரு.அலர்மேல்மங்கை, இ.ஆ.ப., தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர்கள் திரு. பிரபாகரன், திரு. செல்வராஜ், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திருமதி சங்கமித்திரை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் திரு.சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) திரு.ரவிச்சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல தமிழக குரல் செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad